
ஈழத்தின் மூத்த நாடகக் கலைஞர் இளைய பத்மநாதன், அவரை சென்னையில் பேராசிரியர் வீ.அரசு மற்றும் மங்கை வீட்டில் சந்திக்க நேர்ந்தது. 23.02.2020 அன்று தினமலர் அமுதன் அண்ணாவுடன் சென்றிருந்தேன். அங்கு பத்தண்ணா என்று அழைக்கப்படும் இளையபத்மநாதனைக் காணக்கிடைத்தது மகிழ்ச்சி. முதல் முறையாக அவரை நேரில் சந்திக்கிறேன். குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் தோற்றமும் வாகையும் அவரில் தெரிந்தது. மகிழ்ச்சியாக உரையாடினோம். தான் அண்மையில் வெளியிட்ட சிலப்பதிகாரம் புத்தகத்தையும் தான் இது வரை எழுதிய ஏழு நாடக நூல்களையும் எனக்குத் தந்தார். அவற்றை எவ்வாறு யாழ்ப்பாணம் கொண்டு சேர்ப்பது என்ற பயம் ஒரு புறம் இருக்க, அவரது கைகளால் கிடைத்த பரிசு மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது.