இ.தே.தே
நாடகர் ஒருவரது முப்பது வருடகால நாடகத்துறை அனுபவங்களை பதிவிடுவதாக இந்தத் தொடர் அமைகிறது எனலாம். ஈழத்தமிழரின் வரலாற்றின் முக்கியமான மூன்று தசாப்த காலத்தின் நாடக முயற்சிகளின் பதியப்படாத ஒரு பக்கத்தை பதிவிடுவதாக ‘நாடகர் நினைவோடை’; தொடர் அமையும். தொடருக்கான பெயரை முன்மொழிந்த தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் மு.இராமசாமி அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன்.
தனிநபர் நினைவுகளை இரைமீட்பதாக இந்த முயற்சியமைந்தாலும் நீண்ட பயணத்தின் பட்டறிவாக, நிஜ சம்பவங்களின் தொகுப்பாக உள்ளுணர்வுசார்ந்த சுயபார்வையாக மேலும்பலவாக நீளும்.
1990 – 2020 வரையான ஒரு மூன்று தசாப்தகாலம் இலங்கை வடபுலத்தில் எத்தனையோ சம்பவங்கள் பதிவாகி வரலாறாகியிருக்கின்றன. இதே காலகட்டத்தில் பயணித்த அரங்கப்பயணமும் முக்கியமானது. . இதுவொரு காலப்பதிவு, அதுவே வரலாறாகி நிற்கிறது போலும்.
நினைவிலிருந்து ஒரு தொடரை எழுத முற்சிக்கின்ற இந்த முற்சியை ‘நினைவு அரங்கு’ என்பதாகக் கொள்ள முடியும். இங்கு "நினைவு." அதன் பொதுவான பயன்பாட்டில், நினைவகத்தில் சேமிக்கப்பட்ட கடந்தகால அனுபவங்களைக் குறிக்கிறது. அந்த அனுபவங்களை நினைவுபடுத்துவது ஒரு திறன் சார்ந்த செயற்பாடு, சிலர் அனுபவங்களை மீள நினைவுபடுத்துவதில் கைதேர்ந்தவர்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்வாறான திறன் உள்ளவர்களை நல்ல ஞாபக சக்தியுள்ளவர்கள்; என்று நாம் கூறுவது வழமை. நினைவாற்றல் என்பது அற்புதமான கலை எனலாம். நினைவு ஒருவரது தொடர்ச்சியான உணர்வுக்கு மற்றும் வாழ்விற்கு துணைநிற்கிறது. நினைவகத்தில் சேமிக்கப்படும் சம்பவங்கள் ஒரு மன, உடல் மற்றும் சமூக நிகழ்வு ஆகும். நினைவாற்றல்; ஒரு செயல்திறன் மிக்க செயல். ஒருவர் எதையாவது நினைவில் கொள்ளும்போது, பெரும்பாலும் நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ ஒருவித நடத்தைத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார். எதிர்காலத்தில் சில பணிகளைச் செய்வதற்கான நினைவூட்டல்கள பயன்தரவல்லன. . இதனால் தான் ஞாபக சக்தி அவசியமென்கிறோம். ஞாபகம் வைத்திருப்பது என்பது ஒரு கடினமான வேலை. ஞாபகத்திலிருந்து தான் நினைவுகூரல் ஆரம்பமாகிறது.