Dr.தேவநாயகம் தேவானந்த்
இந்தியா-பாகிஸ்தான் மோதல் இந்தியாவிற்கு தெளிவான பல செய்திகளைச் சொல்லியிருக்கிறது. குறிப்பாக, சீனா மோதல்களில் எவ்வளவு பங்கு வகித்தது என்பது தான் இங்கு நோக்கப்பட வேண்டியது. சீனா யுத்தத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிரான ஒரு சோதனைக் களமாகப் பயன்படுத்தியது, அதன் ஆயுதங்களை விளம்பரப்படுத்தியது மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பைச் சோதித்தது. இந்தச் சூழலில் இந்திய அயலுறவுக் கொள்கை முக்கியம் பெறுகிறது. இந்தச்சந்தர்ப்பத்தில் இலங்கை மிக முக்கிய ஸ்தானத்திலிருப்பதால் அதனோடுடனான இந்திய உறவு முக்கியமாகிறது.
வரலாற்றுரீதியாக இலங்கை பொருளாதார நெருக்கடிநிலையிலிருந்து மீள்வதற்கு இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக இடர்கால நண்பனாக செயற்பட்டிருக்கிறது. இந்தியாவின் அண்மைய கொள்கையில் முக்கியமானதாக இருப்பது ‘அயல்நாடுகளுக்கு முன்னுரிமை’ என்பதாகும். இதில் ஏனைய அயல்நாடுகளைவிட இலங்கையில் இந்தியாவின் கவனம் மிகஅதிகமாகவே உள்ளதை அவதானிக்கலாம். இந்தச்சூழலில் இலங்கை இந்தியாவின் நேசக்கரத்தை எவ்வாறு பற்றுறிதோடு தொடர்ந்து தனது பொருளாதார நிலைத்த தன்மையைப் பேணப்போகிறது என்பது முக்கியமாகிறது. இலங்கை புதிய அரசியல் கலாச்சாரத்திற்குள் தன்னை நிலைநிறுத்த முற்படுகின்றதான இந்தக்காலகட்டத்தில் தனது அயலுறவுக்கொள்கையை தெளிந்த மனதோடு வடிவமைத்தாக வேண்டும். இந்திய உதவிகளிலிருந்து இலங்கையின் பொருதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய அணுகுமுறைகள் தேவை எனலாம். இலங்கை அரசாங்கம் தனது ‘தறுக்கணித்த’ நிர்வாகக்கட்டமைப்பை வைத்துக்கொண்டு நகரமுற்படுவதன் விளைவுகளை,; அதன்நகர்வு வேகம் மிக மந்தமாகவே இருக்கிறது. இதற்கு ஏலவே இருந்த நிர்வாகக்கட்டமைப்பை வைத்துக்கொண்டு புதிய சிந்தனைகளையும் நடைமுறைகளையும் நகர்த்த முடியாத இக்கட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். இருப்பினும் இந்திய உதவிகளை துரிதகதியில் பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை நோக்கி நகர்ந்தாக வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இந்தியப்பங்களிப்பை பயன்படுத்தும் திறன் இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும். சந்தேகங்களையும் தயக்கங்களையும் தாண்டி எதிர்கொண்டு வளரும் உத்தியைக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.